எழுத்துக் கூடம்
வெண்பா பயிற்சி

             
   - பயிற்சியாளர்: கே.வி.ராஜா               படைப்பு : லக்கி ஷாஜஹான்


 

உள்ளே நுழைவதற்கு முன்

எழுத்துக்கூடத்தின் எட்டாம்கூட்டம் என்று நினைக்கிறேன்

.வழக்கம் போல் நிகழ்வுகள் நிறைவு் பெற்ற பின்,  பேச்சு,  கவிதை எழுதுவதைப் பற்றி தொடங்கியது . கவிதைகள் பற்றிய அபிப்ராயங்களை வெவ்வேறு நண்பர்கள் சுவையாய் பகிர்ந்து கொள்ள , அங்கிருப்பவர்கள் எல்லாருமே சுமாராக கவிதை எழுதத் தெரிந்தவர்கள் எனினும் புதுக்கவிதையை நட்பு பாராட்டுபவர்களாக இருந்தார்கள் .நண்பர் கே.வி. ராஜா கொஞ்சம் விதிவிலக்காய் வெண்பா கவிதைகளை பற்றிய தம் இரசனையை விவரிக்க எல்லோருக்கும் பற்றிக் கொண்ட ஆர்வமே எழுத்துக்கூடத்தில் வெண்பா வகுப்பு துவங்க முதல் காரணமாய் அமைந்தது .

கவிதை எழுத கற்றுத்தாருங்கள் என்று கூச்சம் விட்டு கேட்டுக் கொண்ட எழுத்துகூட நண்பர்கள்.

"கவிதை எழுதவெல்லாம் கற்றுத் தர எனக்குத் தெரியாது.  வெண்பா வெண்பான்னு அடிக்கடி சொல்லிக்கிறாங்களே, அது எப்டிப்பா இருக்கும்ன்னு ஒரு சந்தேகம் வர்றவங்களுக்கு "இது தான் வெண்பா" என்று கை காட்டிவிடுகிறேன்".--கே.வி. ராஜா

 50 + களில் இருப்பவர்கள் . தெரியாது என சொல்ல வெட்கப்படவில்லை. வெட்கப்படுபவர்கள் வாழ்க்கை முழுதுமே எதையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை அவர்கள் வகுப்பில் காட்டும் ஆர்வத்திலிருந்தே நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது .ஈகோ இல்லை - இவர்களிடம் என்ன கேட்பது என்ற இறுமாப்பு இல்லை . இதெல்லாம் தேவையா என்ற அலட்சியம் இல்லை. பங்கு கொண்ட அனைவருமே சின்னக் குழந்தையாய் மாறினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  இதோ இன்னும் ஒரிரு வகுப்புடன் இந்த கற்றறிதல் நிறைவுக்கு வரவிருப்பதே இதற்கு சாட்சி ..

எளிமையாக மனதில் வைத்திருக்க சிம்ரனிலிருந்து மனோரமா வரை, அஸினிலிருந்து அரவிந்தசாமி வரை எல்லோருமே உதாரணங்களாய் ரியாத் தமிழ் சங்க எழுத்துக்கூடம் வந்து போனது மற்றொரு சுவாரஸ்யம் .தெரிந்ததை சொல்லி தெரியாததை புரிய வைத்தல் ( Known to unknown) நுட்பத்தை வாத்திகள் மட்டும் தான் உபயோகப்படுத்த முடியுமா என்ன..? கணிணி பொறியாளர் - இணையத்திலிருந்துதான் இலக்கணம் கற்றுக் கொண்டேன், எனக்கு தெரிந்ததை சொல்லித் தருகிறேன் என்று எளிமையாய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு " வெண்பா ஆசிரியர் என்றெல்லாம் கூட குறிப்பிடாதீர்கள் ஷாஜி, வெண்பா பகிர்தல் வகுப்பு என்றே இதை வைத்துக் கொள்வோம் " என்று அடக்கமாய் சொல்லி இதை மிக நளினமாய் கொண்டு போன நண்பர் கே. வி.ராஜா பாராட்டுக்குரியவர்.

நானும் இந்த வகுப்புகளிலிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். இந்த தொகுப்பில் ஏதேனும் எழுத்துப்பிழை ,சொற்பிழை,கருத்துப்பிழை இருப்பின் அதற்கு அடியேனது பொறுப்பற்றத்தனமும் தட்டச்சுத் தனமும் மட்டுமே பொறுப்பு . சுட்டிக்காட்டினால் தயங்காமல் திருத்திக் கொள்ளப்படும். ஒரு குதிரைப் பாய்ச்சலாய் இந்த கட்டுரை இதுவரை நடந்த வகுப்புகளின் சாரம்சத்தை பற்றி மட்டும் சொல்ல தலைப்பட்டிருக்கிறது ..அவ்வளவே ...

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் - வேறென்ன நான் சொல்ல..?

-அன்புடன் லக்கி ஷாஜஹான்.

=========================================

எழுத்துக்கூடம் வெண்பா பயிற்சி - இதுவரை....
பயிற்சியாளர் : கே.வி.ராஜா .

=========================================

தமிழ் எழுத்துக்களை ஒலி வடிவில் உச்சரிக்க முயலும்போது அவை இரண்டு வகையாய் பிரிக்கப்படுகின்றன

1. குறில்
2. நெடில்

குறுகிய ஓசை உடையவை குறில் எனப்படும். இதன் கீழ் வகைப்படும் எழுத்துக்களை குற்றெழுத்துக்கள் என்பர் . (எ.கா ) அ, இ, உ, எ, ஒ

நீண்ட ஓசை உடையவை நெடில் எனப்படும். இதன் கீழ் வகைப்படும் எழுத்துக்களை நெட்டெழுத்துக்கள் என்பர் . (எ.கா ) ஆ,ஈ, ஊ,ஏ,ஐ ,ஓ ,ஔ.

குற்றெழுத்துக்கள் யாவும் ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும். ( மாத்திரை என்பது கால அளவை குறிக்கிறது . நான்கு கால் பகுதிகளை கொண்டது ஒரு மாத்திரை. (எடுத்தல் ,தொடுத்தல்,முடித்தல் , விடுத்தல் என்று அந்த நான்கு கால அளவுகளை வரையறுக்கின்றனர்.)

நெட்டெழுத்துக்கள் யாவும் இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கும். ஐ எழுத்தும் ஔ எழுத்தும் அவை பயன்படும் இடங்களை பொறுத்து இந்த மாத்திரை அளவு மாறுபடும் .

உதாரணம் :

சொல்லின் முதலில் வரும்போது --> (உ- ம்) யம் --> இரண்டு மாத்திரை

சொல்லின் இடையில் வரும்போது --> (உ- ம்) கலைஞர் --> ஒன்றரை மாத்திரை

சொல்லின் இறுதியில் வரும்போது --> (உ- ம்) கவலை -->ஒன்றரை மாத்திரை.

-------------------------------

வார்த்தையைப் படிக்கும்போது அசை பிரித்து படித்தலில் பொருள் உணர்கிறோம்

. "எங்கிருந்தோ வந்தான் " என்பதை நிதானமாக அசை போட்டு படிக்க எங்-கிருந் -தோ வந்-தான் என படிக்கிறோம் என்றால் சரியான முறையில் அசை போட்டு படித்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம் .

அசை என்பது ஆங்கிலத்தில் உள்ள சிலபல் போல என்பதை நினைவில் கொள்ளுதல் நலம்.  ஒரு வார்த்தை ஒரு அசை கொண்டதாக இருக்கலாம் (உ-ம் ) வா, தா, நீ - சில வார்த்தைகள் பல அசை கொண்டதாக இருக்கலாம் . (உ-ம்) காலம், வந்தான், சிரித்தான் , மணிமேகலை. இப்படி பல அசை கொண்ட ஒரு வார்த்தையை சீர் என்கிறோம். அசைகள் பல ஒன்று சேர்ந்தது சீர், சீர்கள் பல ஒன்று சேர்ந்தது அடி அதாவது வரி . வரிகள் பல ஒன்று சேர்ந்தது செய்யுள் அல்லது பத்தி.

ஒரு சீரை அல்லது ஒரு வார்த்தையை அசை பிரித்தலுக்கு அலகிடுதல் என்று பெயர் . ஒரு சீரை எடுத்து அதன் மத்தியில் சில கோடுகள் போட்டு பிரித்தெடுத்தால் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு அசை எனப்படும்.ஆனால் இப்படி கோடுகள் போட்டு ஒரு சீரை அறுத்தெடுக்க சில விதிமுறைகள் உள்ளன .. எப்படியெல்லாம் அறுத்தெடுப்பது என்று கொஞ்சம் பார்ப்போம்.

1 ) வார்த்தைக்கு நடுவில் எங்கு மெய்யெழுத்துக்கள் வருகிறதோ அதற்கு பக்கத்தில் ஒரு கோடு போட்டுக் கொள்ளுங்கள். சமயத்தில் இரண்டு மெய்யெழுத்துக்கள் அருகருகே வந்தால் அந்த இரண்டாவது மெய்யெழுத்துக்கு பக்கத்தில் அந்த கோடு இருக்கட்டும்.

(உ-ம்) கண்| ணன்

(உ-ம்) கீழ்த்|திசை

2 )தனியாக ஒரு நெடில் எழுத்து அசைக்கப்பட்டால் அங்கே ஒரு கோடு போடுங்கள்

(உ-ம்) மா| னா|மதுரை

3) ஓரெழுத்து மட்டும் தனியாகப் அசைக்கப்பட்டால் ( அது குறிலாகவோ அல்லது நெடிலாகவோ இருக்கலாம் ) அங்கே ஒரு கோடு

(உ-ம்) கழு| கு|மலை, மா |தவம்

4)இரண்டு குறில் எழுத்துக்களோடு அசைக்கப்பட்டால் அங்கு ஒரு கோடு.

(உ-ம்) கட|வுள்

5) ஒரு குறில் ஒரு நெடில் இரண்டும் இணைந்து வந்து அசைக்கப்பட்டால் அங்கு ஒரு கோடு.

(-ம்) விவா| கம்

6 ) குறில் எழுத்தோ நெடில் எழுத்தோ ஒரு மெய்யெழுத்தோடு அசைக்கப்பட்டால் அங்கு ஒரு கோடு.

(உ-ம்) கல்|வி, கால்|வலி

7 ) இரண்டு குறில் எழுத்து ஒரு மெய்யெழுத்துடனோ , அல்லது ஒரு குறில் ஒரு நெடில் இவையிரண்டும் ஒரு மெய்யெழுத்துடனோ அசைக்கப்பட்டால் அங்கு ஒரு கோடு .

(உ-ம்) படம்|பார் , சுறா|மீன்

மேற்சொன்ன ஏழு வகைகளையும் வைத்து பிரிக்கப்படும் அசைகள் அடிப்படையில் இரண்டு வகையாக அழைக்கப்படுகின்றன.

1.நேரசை

2.நிரையசை

நேரசை க்குரிய எளிய இலக்கணம்

குறில் தனித்தும்
குறில் ஒற்றெடுத்தும்
நெடில் தனித்தும்
நெடில் ஒற்றெடுத்தும்
வந்து பிரிக்கப்பட்டால் அது நேரசையாகும்.

(உ-ம்)

கல்
கா
கால்

நிரையசை க்குரிய எளிய இலக்கணம்

இரு குறில் தனித்தும்
இரு குறில் ஒற்றெடுத்தும்
குறில் நெடில் தனித்தும்
குறில் நெடில் ஒற்றெடுத்தும்
வந்து பிரிக்கப்பட்டால் அது நிரையசையாகும்

(உ-ம்)

பட
படம்
படா
படாம்

-----------------------------------

ஒரு வார்த்தை அல்லது சீரில் இரண்டு அசைகள் வந்தால் அது ஈரசை சீர் எனப்படும் .

மூன்று அசைகள் வந்தால் அது மூவசை சீர் எனப்படும்.

-ம் - மன்|னன் = ஈரசை சீர் , மலர்| மன்|னன் = மூவசை சீர்

ஓரடியில் ஈரசை சீர்களோ, மூவசை சீர்களோ சாதாரணமாய் வரலாம். இந்த சீர்களை அசை பிரித்து அப்படி பிரித்ததை பெயரிட்டு அழைக்க வாய்ப்பாடுகளை பயன்படுத்துகின்றனர். சீர்களில் வரும் நேரசை நிரையசை எத்தனை வருகிறதோ அது இரண்டாக வந்தால் மாச்சீர், விளச்சீர் என்றும் மூன்றாக வந்தால் காய்ச்சீர்,கனிச்சீர் என்றும் பெயரிட்டு அழைக்கின்றார்கள்.

மன்னன் என்ற ஒரு வார்த்தையைப் பிரிப்போம். மன்|னன் = இதில் மன் என்பது ஒரு அசை, னன் என்பது ஒரு அசை. இரண்டுமே குறில் ஒற்றோடு வந்திருப்பதால் நேரசை இல்லையா ..? இப்படி ஒரு சீரில் பிரிக்கப்பட்ட இரண்டு அசையும் நேரசையாக இருந்தால் அது மாச்சீரில் அடங்கி தேமா என்றழைக்கப்படும்.

மறவன் என்ற ஒரு வார்த்தையைப் பிரிப்போம் மற|வன் = இதில் முதல் அசை இரண்டு குறில் தனியாக வந்திருப்பதால் நிரையசை. இரண்டாவது அசையில் குறில் ஒற்றோடு வந்திருப்பதால் நேரசை . இப்படி ஒரு சீரில் பிரிக்கப்பட்ட இரண்டு அசையில் முதல் அசை நிரையசையாகவும் இரண்டாவது அசை நேரசையாகவும் வந்தால் இதுவும் மாச்சீரில் அடங்கி புளிமா என்றழைக்கப்படும்

மாநகர் என்ற ஒரு வார்த்தையைப் பிரிப்போம். மா|நகர் = இதில் முதல் அசை நெடில் தனியே வந்திருப்பதால் நேரசை. இரண்டாவது அசையில் இரண்டு குறில் தனித்து ஒரு ஒற்றோடு வந்திருப்பதால் நிரையசை . இப்படி ஒரு சீரில் பிரிக்கப்பட்ட இரண்டு அசையில் முதல் அசை நேரசையாகவும் இரண்டாவது அசை நிரையசையாகவும் வந்தால் இது விளச்சீர் வகையில் அடங்கி கூவிளம் என்றழைக்கப்படும்.

கசடற என்ற ஒரு வார்த்தையைப் பிரிப்போம்.  கச|டற = இதில் கச ஒரு அசை டற ஒரு அசை . இரண்டு இருகுறில் தனித்து வந்து பிரிந்திருப்பதால் நிரையசை ஆகும் . இப்படி ஒரு சீரில் பிரிக்கப்பட்ட இரண்டு அசையும் நிரையசையாக வந்தால் இதுவும் விளச்சீர் வகையில் அடங்கி கருவிளம் எனப்படும்.

இப்போது இந்த வாய்ப்பாடுகளை மட்டும் பார்ப்போம்

============ மாச்சீர் =============

நேர்,நேர் = தேமா

நிரை,நேர் = புளிமா

===============  விளச்சீர் ============

நேர்,நிரை = கூவிளம்

நிரை,நிரை = கருவிளம் 

 

மூவசை சீர்கள் காய்ச்சீர், கனிச்சீர் வாய்ப்பாட்டில் அடங்கும் என பார்த்தோம் .

===============  காய்ச்சீர்  ============

ஒரு சீரின் மூன்றாவது அசை நேரசையாக இருப்பின் அது காய்ச்சீர் ஆகும்.

கல்லாமை = கல் | லா | மை = நேர் ,நேர், நேர் = தேமாங்காய்

இயலாமை= இய| லா | மை = நிரை ,நேர்,நேர் = புளிமாங்காய்

மாநகரம்= மா | நக | ரம் = நேர் ,நிரை,நேர் = கூவிளங்காய்

கடல்புறத்தான் = கடல் | புறத் | தான் = நிரை , நிரை , நேர் = கருவிளங்காய்..

===============  கனிச்சீர்  ============

ஒரு சீரின் மூன்றாவது அசை நிரையசையாக இருப்பின் அது கனிச்சீர் ஆகும்.

கல்லாதவன் = கல் | லா | தவன் = நேர் , நேர், நிரை = தேமாங்கனி

உதவாதவன் = உத | வா | தவன் = நிரை ,நேர்,நிரை = புளிமாங்கனி

சிங்களத்தவர்=சிங் | களத் | தவர் = நேர்,நிரை,நிரை = கூவிளங்கனி

உலகளந்தவன் = உல | கலந் | தவன் = நிரை ,நிரை,நிரை = கருவிளங்கனி

குறிப்பு

: பொதுவாக வெண்பாவில், மரபுக்கவிதைகளில் கனிச்சீர் பயன்படுத்தப்படுவதில்லை.  இறுதி அடியாக வரும் வரியின் ( இதை ஈற்றடி என்பார்கள் ) கடைசி சீர்  "நாள்" ,"மலர்" , "காசு", "பிறப்பு" என்ற ஏதேனும் ஒரு வாய்ப்பாடுடன் வரவேண்டும் .குறிப்பாய் அந்த சீர் உகரத்தில் இருப்பின் நேரசையாய் இருந்தால் (நேர்பு ) காசு என்றும் நிரையசையாய் இருந்தால் (நிரைபு) பிறப்பு என்றும் வருதல் வேண்டும்.  வெண்பாவின் கடைசி வரியில் இருக்கும் கடைசி வார்த்தை (ஈற்றடியின் ஈற்றுசீர்) ஓரசைச் சீராக இருக்க வேண்டும். அதனை பிரிக்க முடியாது.
 

குறிப்பு: இறுதி சீர் மட்டும் என்பதை நினைவில் கொள்க >

.கா 1

பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

மேலே உள்ள குறளின் இறுதி சீர் "நன்று"  நேரசையாக வந்து உகரத்தில் முடிவதால் இதை காசு என்று குறிப்பிட வேண்டும் .

.கா 2

வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.

மேலே உள்ள குறளின் இறுதி சீர் "துயர்வு" நிரையசையாக வந்து உகரத்தில் முடிவதால் இதை பிறப்பு என்று குறிப்பிட வேண்டும் .

சீர்களை கொண்டு செய்யுள் வடிவமைத்தலில் இதுவரை பார்த்த சில அளவீடுகள்

1) இரண்டடி முதல்  எழுதலாம் .

2) இரண்டு அடியில் எழுதப்பட்டால் அது குறள் வெண்பா.

3) மூன்று அடியில் எழுதப்பட்டால் அது சிந்தியல் வெண்பா.

4) நான்கடி வரை எழுதப்பட்டால் அளவியல் வெண்பா.

5) 5 முதல் 11 அடிகள் வரை எழுதப்பட்டால் அது பஃறொடை வெண்பா.

6) அதற்கு மேலே போனால் கலிவெண்பா.
 

...........  மேலும் வரும்
 


தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!


 தங்கள் மேலான கருத்துகளை webmaster@riyadhtamilsangam.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006