எழுத்துக்கூடத்தின் 36
ஆம்
கூட்டம் - ஒரு
பார்வை
========================
29 பிப்ரவரி 08
எழுத்துக்கூடத்தின் 36 வது சந்திப்பு - ஒரு
பார்வை
இடம்: திரு. பாலமுகுந்தன் அவர்கள் இல்லம்
எழுத்தாளர் சுஜாதாவின் மரணத்துக்கு இரங்கல்
தெரிவிக்கும் பொருட்டு எழுத்துக்கூடச்
சந்திப்பு நிகழ்ந்தது. ஓர் இறுக்கமான மௌனத்தின்
மத்தியில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
திரு. பாலமுகுந்தன் பேசுகையில் எல்லாத்
தரப்பினரையும் கவர்ந்த ஓர் எழுத்தாளர்,
நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையைப்
பலர் மனதில் தோற்றுவித்து அவர்களை எழுதத்
தூண்டியவர், எளிய நடையில் தம் கருத்துகளை
எடுத்துரைத்தவர், இளைய தலைமுறையினரின் உள்ளத்தை
எழுத்தால் கவர்ந்தவர் என்று நினைவுகூர்ந்து தன்
அஞ்சலிகள் செலுத்தினார்.
திரு. வெற்றிவேல் அவர்கள் சுஜாதாவின் பேச்சைக்
கனரா வங்கி ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில்
கேட்ட போது, எழுத்து மட்டுமின்றி அவர் சிறந்த
பேச்சுத் திறனும் பெற்றிருந்ததை
நினவுகூர்ந்தார். மேலும் விஞ்ஞானத்துறை
சம்பந்தப்பட்ட அவர் சாதனைகளையும் எடுத்துரைத்து,
தன் இரங்கல் தெரிவித்தார்.
பேராசிரியர் மாசிலாமணி சுஜாதாவின் அறிவியல்
சம்பந்தப்பட்ட செய்திகள் கூறும் கதைகளைத் தன்
மாணவர்களையும் படிக்கச் சொன்னதை நினவுகூர்ந்து,
தான் வெளியிட்ட அறிவியல் சம்பந்தப்பட்ட இரு
புத்தகங்களுக்கு சுஜாதா அவர்கள் முன்னுரை
வழங்கியதாகவும், பழகுவதற்கு இனிய மனிதர்,
தலைக்கனமோ கர்வமோ இல்லாத எளியவர் என்றும்,
எழுத்துலகில் அவர் விட்டுச் சென்றுள்ள இடம்
தற்சமயம் வெற்றிடமாகவே இருக்கிறது என்றும்,
திரைப்படத்துறையிலும் அவரின் சாதனைகள் குறித்து
விவரமாகக் கூறியும் தன் இரங்கல் தெரிவித்தார்.
சுஜாதா அவர்களுடன் பெங்களூரில் பணிபுரிந்த
நண்பர் திரு. அருண்(தற்போது தமாமில் வசிப்பவர்)
தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார். அவருடன்
பழகிய நாட்களையும், அவருடைய சாதனைகளையும்
நினைவுகூர்ந்தார்.
மேலும் திரு,இளங்கோவன், திரு.ராசப்பா, திரு.
சாமி, திருமதி. பாலமுகுந்தன் - அனைவரும் தம்
இரங்கல் தெரிவித்தனர்.
.
|