========================
07 நவம்பர் 2008
இடம்: மகிழகம், லூசண்ட் காம்பவுண்ட் பின்புறம்
கலந்து கொண்டவர்கள்: திரு. மாசிலாமணி, திரு.
இளங்கோவன், திரு. ராசப்பா, திரு. கே.வி.ராஜா,
திரு. ஜெயபால், திரு. அழகப்பன், திரு. காமராஜ்,
திரு. ரமேஷ், திரு. எஸ்.என். ராஜா,
திரு.கென்னடி, திரு. சபாபதி.
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 49 வது வார சந்திப்பில் பேசிக் கொண்டபடி
புதுமைப்பித்தன் கதைகள் ஆய்வு, காமராசர்
மற்றும் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைச்
சரிதத்தில் ஒரு சில நிகழ்வுகள், அறிஞர் அண்ணா
தம்பிக்கு எழுதிய கடிதங்கள் இந்த வாரம்
எழுத்துக்கூடத்தின் பேசுபொருளாக அமைந்தன.
திரு. மாசிலாமணி அவர்கள் புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்'
மற்றும் 'அகல்யை' கதைகள் வாசித்தார். அதன் பின்
நிகழ்ந்த கலந்துரையாடலில் அனைவரும் கதைகள்
குறித்த தத்தம் கோணத்தை எடுத்தியம்பினர்.
புதுமைப்பித்தனின் எழுத்து மற்றும் கருத்து
வன்மை அனைவரையும் கவர்ந்தது கருத்துப்
பரிமாற்றத்தின் வீச்சின் மூலம் வெளிப்படையாகத்
தெரிந்தது.
திரு. ராசப்பா அவர்கள் காமாராசர், அண்ணா பற்றி
வழங்கிய வாழ்க்கைக் குறிப்புகள் பல புதிய
செய்திகள் இயம்பின. 'பண்பாட்டுப் பேழை' என்று
புகழப்படும் அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்
குறித்த முன்னுரை வழங்கப்பட்டது. வாரம் ஒரு
கடிதமாக வரும் வாரங்களில் இவை எடுத்தாளப்படும்.
கூட்டம் முடிந்த பின் சந்திப்பில் கலந்து
கொண்ட அனைவரும் தமிழில் மட்டும் உரையாடிய படியே
கைப்பந்து விளையாடிக் களித்தது ரசிக்கும்படி
இருந்தது.
தமிழ்ப்புத்தகங்கள் பலரும் படித்துப் பயன்
பெறும் வண்ணம் 21.11.08 முதல் நூலகம்
மகிழகத்தில் நிறுவப்படவுள்ளது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திரு.
மாசிலாமணி அவர்கள் ஐம்பதுக்கும் மேலான
புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளார். மேலும்
புத்தகங்கள் வழங்க விருப்பமுள்ளவர்கள்
வரவேற்கப்படுகின்றனர்.
வரும் வாரம்..21.11.'08 வது சந்திப்பில்...
கதாவிலாசம் - திரு. கே.வி. ராஜா
ஜெயகாந்தன் கதைகள் - ஓர் அலசல் - திருமதி. கீதா
ரமேஷ்
புதுமைப்பித்தன் கதைகள் - ஓர் அலசல் - திருமதி.
மலர் சபாபதி
சங்க இலக்கியம் - விளக்கவுரை - திரு. இளங்கோவன்
அண்ணாவின் கடிதங்கள் - ஆய்வுரை - திரு. சபாபதி.
அன்புடன்,
மலர்.